x

Tamilmagan

தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். இவர் எழுதிய ‘மானுடப் பண்ணை’ எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசுகள் பெற்றிருக்கின்றன. அன்றைய செங்கல்பட்டு மாவட்டம், இன்றைய திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், அரசறிவியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 1984-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படித்தபோது, டி.வி.எஸ். நிறுவனமும், இதயம் பேசுகிறது வார இதழும் இணைந்து நாவல் போட்டி நடத்துவதாக அறிவித்தன. இறுதி ஆண்டுத்தேர்வை ஓரம் கட்டிவிட்டு ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ என்ற நாவலை எழுதி பரிசுப் போட்டிக்கு அனுப்பினார்.. அதில் தேர்வு பெற்று, முதல் பரிசாக டி.வி.எஸ்.50. வாகனத்தைப் பெற்றார். அக்கதையை முதற்பரிசுக்குத் தேர்வு செய்தவர் சின்னக்குத்தூசி ஆவார். அந்த நாவல் ‘இதயம் பேசுகிறது’ இதழில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த ஓவியங்களோடு தொடர்கதையாக வெளியானது. உள்ளக் கடத்தல், ரசிகர் மன்றம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். கொற்றவை, பீட்சா 3 ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.. இவருடைய ஆபரேஷன் நோவா, நான் ரம்யாவாக இருக்கிறேன், ஆகிய அறிவியல் நாவல்கள் திரைப்படத் தயாரிப்புக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளன.

Related Products