Thamizhachi Thangapandian
தமிழச்சி தங்கப்பாண்டியன் (பிறப்பு: 25 ஜு லை 1962) கவிஞரும், நாடாளுமன்ற தி.மு.க.மக்களவை உறுப்பினரும் ஆவார். விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்த இவரது இயற்பெயர் சுமதி ஆகும். இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி.தங்கப்பாண்டியன் அவர்களின் மகளும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய தொழிற்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்களின் சகோதரியும் ஆவார். மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும், விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பெற்றார். மதுரையில் உள்ள மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் பயின்று புதுமுக வகுப்பில் தேறினார். பின்னர் மதுரை தியாகராயர் கல்லூரி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்று இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 'ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள்' என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது பல படைப்புகள் விகடன் இதழில் வெளிவந்துள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை, த.சுமதி என்கிற தன் இயற்பெயரிலே எழுதுகின்ற இவர், தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் அவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கின்ற இவரது சிறுகதைகள் சில ஆனந்த விகடன் மற்றும் அவள் விகடனில் வெளிவந்துள்ளன.தேர்ந்த கவித்துவம், சொல்வளம், தொடர்ச்சியான கவிதை இயக்கம், அரசியல் உள்ளீடு கொண்ட படைப்பு பலம், தொன்மையும் நவீனமும் இணையும் பாங்கு, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, உலகமயமாக்கலின் அடையாள அழிப்பிற்கு எதிர்திசையில் தமிழின் பன்முக அடையாளங்களை தேடிப் படைக்கும் ஆற்றல் - என விரிவான கவித்தளத்தில் இவரது கவிதைகள் இயங்குகின்றன. பிசாசு என்ற திரைப்படத்தில் 'போகும் பாதை தூரமில்லை' என்ற பாடலை எழுதியுள்ளார். கவிதைகள், சிறு பத்திரிக்கைகளிலும், வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பன்னாட்டு அரங்குகளின் இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு பெற்றிருக்கின்றார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.