Theni Seerudaiyan
கருப்பையா எனும் இயற்பெயர் கொண்ட தேனி சீருடையான் வசிப்பது தேனி நகரில். அவர் தன்னுடைய ஏழாவது வயதில் பார்வையை இழந்து, அதன் பிறகு சென்னை பூந்தமல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். பிரெய்லி முறையில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற சீருடையான் தனது இருபதாவது வயதில் அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற்றார். எளிய குடும்பமும், உணவின்றி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கான பொருளாதாரப் பின்னணியும் கொண்ட இளமைக்காலம் அவருடையது. பார்வை பெற்ற பிறகு, பார்வையற்றோருக்கான அரசின் சலுகைகளும் கிடைக்காமல் போகவே வறுமையோடு போராடும் வாழ்க்கையே தொடர்ந்தது. தந்தையின் கூலித் தொழிலைத் தொடர முயன்று, சாலையோர தள்ளுவண்டிக் கடையில் பழ வியாபாரத்தைத் துவங்கினார் சீருடையான். இப்போது பெரியகுளம் சாலையில் ஒரு பழக்கடை நடத்தி வருகிறார். உழைப்பின் மூலம் வறுமையை வெற்றி கொண்ட அவர், குடும்பத்தோடு தேனி காட்டுச் சாலை பகுதியில் வசிக்கிறார். ஆறாம் வகுப்பிலும், ஒன்பதாம் வகுப்பிலும் துவங்கிய கவிதை முயற்சிகள் 1972 ஆம் ஆண்டில் ”விரக்தி” எனும் கவிதை ’கணையாழி’ இதழில் பிரசுரமானதில் வெற்றியடைந்தது. தொடர்ந்து ஞானரதம், செம்மலர், வானம்பாடி . . . என பல இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதி வந்தார் சீருடையான். பத்திரிகையாளர் பொன் விஜயன் அவர்களின் தூண்டுதலால் சிறுகதை வாசிப்பில் கவனம் திரும்பியதாகக் குறிப்பிடும் அவர், கந்தர்வன், ஜெயந்தன் ஆகிய எழுத்தாளர்களின் படைப்பில் ஈர்க்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளார். ”புதிய நம்பிக்கை” இதழில் சீருடையானின் முதல் சிறுகதை பிரசுரமானது. 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிவித்த நாவல் போட்டியில் பங்கேற்று, மூன்றாம் பரிசினைப் பெற்றது சீருடையானின் “கடை” நாவல். தொடர்ந்து இலக்கிய இதழ்களில் சிறுகதைகளையும், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதிவரும் சீருடையானின் நாவல்களில் “நிறங்களின் உலகம்” மிக முக்கியமான படைப்பு. பார்வையற்றவர்களின் உலகத்தை தமிழில் பதிவு செய்த முதல் நாவல் இதுவாகும். சீருடையானின் படைப்புகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது. அய்.தமிழ் மணியின் இயக்கத்தில் தேனி சீருடையான் குறித்த ஆவணப்படம் “தனித்த பறவை” உருவாக்கப்பட்டுள்ளது.தேனி சீருடையானின் படைப்புலகம் எனும் குறுநூலினை கலைஞன் பதிப்பகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து வெளியிட்டிருக்கிறது. தமுஎகச அறம் கிளை பாரதி புத்தகாலயத்தோடு இணைந்து சீருடையானின் நேர்காணலை தனி நூலாக வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாவட்டப் பொறுப்புகளிலும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி, தற்போது மாநிலக்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.