Thi.Ka.Sivasankaran
தி.க.சிவசங்கரன் (30 மார்ச் 1925 – 25 மார்ச் 2014), மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறுவயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964-ல் சோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித்துறையில் சென்னையில் பணியாற்றி 1990-ல் ஓய்வு பெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் தமிழில் முக்கியமான கவிஞரும், சிறுகதையாசிரியரும் ஆவார். நா. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். டிசம்பர் 14,1964-ல் வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு, தோழர்.ஏ.எஸ்.மூர்த்தியின் பரிந்துரையின் பேரில், சோவியத் செய்திதுறை ஆசிரியர் குழுவில் இணைந்தார். இங்கு பணியாற்றிய காலத்திலேயே, 'தாமரை'யின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார். 'விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்' என்னும் நூலுக்கு 2000-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.