x

Tho.Mu.Si.Ragunathan

தொ.மு.சி. என்றழைக்கப்படும், தொ.மு.சிதம்பர ரகுநாதன் அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதிய தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமர்சனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது. ரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923-ல் பிறந்தார். இவரது முதல் சிறுகதை 1941-ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, 1942-ல் சிறைக்குச் சென்றார். 1944-ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும், பின்பு 1946-ல் ‘முல்லை’ என்ற இலக்கியப் பத்திரிகையிலும் பணியாற்றினார். இவரது முதல் நாவலான புயல் 1945-ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948-ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951-ல் ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவலை எழுதினார்.. இந்நாவல் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு, தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழை நடத்தினார். அந்த இதழ் மூலம், டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 1960-ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா ‘விளாடிமிர் இலிச் லெனின்’ ஆகியவையாகும். 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988-ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948-ல் புதுமைப்பித்தன் இறந்தபின், அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951-ல் புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999-ல் ‘புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும்’ என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951-ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும், புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ.கோ.சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழு வேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது ‘பஞ்சும் பசியும்’ நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் மற்றும் ஒரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார். “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங்களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர். 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார். இவரது ‘பாரதி - காலமும் கருத்தும்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 1983-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products