x

Tho.Paramasivan

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் (1950 - டிசம்பர் 24, 2020) தமிழறிஞரும், திராவிடப் பண்பாட் டு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தொ.பரமசிவன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ஆறாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞராக இணைந்தார். சாகிர் உசைன் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998 முதல் 2008 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்க வேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைத்தவர். திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்தவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக, கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன. அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது. தமிழ்மொழியின் மீதும் பெரும்பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்தபோதும் தன்னுடைய ஆய்வினை செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிருதமும் கற்றார். இவர் எழுதிய நூல்கள்: அறியப்படாத தமிழகம்,பண்பாட்டு அசைவுகள் , அழகர் கோயில் - மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண, சமயம் (தொ.ப - சுந்தர் காளி உரையாடல்), சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடு பூக்கள், உரைகல், இந்து தேசியம், நாள் மலர்கள் , மானுட வாசிப்பு, பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம், செவ்வி

Related Products