x

Vaali

கவிஞர் வாலி, (இயற்பெயர்: டி.எஸ்.ரங்கராஜன்; 29 அக்டோபர் 1931 - 18 ஜூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி, திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார். 2007-ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வாலி' திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து, ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, 'வாலி' என்ற பெயரைச் சூட்டினார். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால், வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில், பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. வாலி அவர்களின் 80-வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. 1958 – ‘அழகர்மலை கள்வன்’ என்னும் (முதல் திரைப்படம்) திரைப்படத்தில் பாடல் எழுதத் துவங்கிய வாலி, 2013-ஆம் ஆண்டு மறையும் வரை 55 ஆண்டுகள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளதோடு, கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

Related Products