vai.Mu.Kothainayagi
வை.மு.கோதைநாயகி (டிசம்பர் 1, 1901 - பிப்ரவரி 20, 1960), தமிழ் நாவல் எழுத்தாளர் ஆவார். துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரைச் சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். 115 நாவல்களை எழுதியுள்ளார். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார். கோதைநாயகி, திசம்பர் 1, 1901 ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் பிறந்தார். பிறந்த ஒரு வயதிலேயே தன் தாயை இழந்தார். சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம் என்பதால் 1907-ல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதான போது திருமணம் ஆனது. கோதை நாயகியின் வெற்றிக்கு அவரது செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதி தான். திருமணத்தின் போது கோதைநாயகி பள்ளி சென்று படித்தவரில்லை. பார்த்தசாரதி, அவரைக் கல்வி கற்கச் செய்தார். கோதைநாயகி, தன் மாமியாரிடம் தெலுங்கு மொழியைக் கற்றார். கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. தொடக்கக் காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குப் பழங்கதைகளைச் சொல்லி வந்தார். சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்குக் கற்பனைக் கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. இதனைக் கண்ட அவரது கணவர் அவரிடம் காணப்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு அவரைப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். நாடகங்களைப் பார்த்து இரசித்த கோதைநாயகிக்குத் தானே நாடகங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, இந்திர மோகனா என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாடகத்தைப் பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது எனலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு பட்டம்மாளிடம் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார். கோதைநாயகி, நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் அருணோதயம், வத்சகுமார், தயாநிதி என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவை. 115 நாவல்கள் தவிர்த்து, இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதர படைப்புகளாகும்.