Vairamuthu
வைரமுத்து (பிறப்பு: 13 ஜூலை 1953) புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நாவலாசிரியரும் ஆவார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்றுள்ளார். ‘நிழல்கள்’ (1980) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற, “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 6000-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பல்வேறு இசையமைப்பாளர்களுடனும் இணைந்து இவர் வழங்கிய பாடல்கள் சிறந்த பாடல்களாக விளங்குகின்றன. கலைமாமணி, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 40 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்னும் நாவலுக்கு 2003-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.