V.O.Chidambaram
வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் (செப்டம்பர் 5, 1872 - நவம்பர் 18 1936) ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த, வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை கொண்டிருந்தவர். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம் மற்றும் வெளிப்படையான குணம் ஆகியவை உடையவராக இருந்தார். தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களையும் படித்து, அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும், விளக்க உரைகளையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும், தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் தினசரி விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892-ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார். இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார். பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் போட்டியாக, முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. இதனால் கோபம் கொண்ட பிரிட்டிஷ் அரசு வ.உ.சி.-யை தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டி ஆயுள் தண்டனை விதித்து சிறையிலடைத்தது. அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
துவக்கத்தில் வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895-ல் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும், குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார். காவல் துறையினரால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலையானதால் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். இச்சூழ்நிலையை விரும்பாத அவரது தந்தை வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞரானார். நூல்கள், வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை இந்த நூல்கள் தவிர்த்து திருக்குறளுக்கு உரை மற்றும் சில மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ள வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு தனது 64-வது வயதில் மறைந்தார்.