Yuvan Chandrasekar
யுவன் சந்திரசேகர் (பிறப்பு: டிசம்பர் 14, 1961) தமிழ் எழுத்தாளர், கவிஞர். ஆர்.சந்திரசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட யுவன் சந்திரசேகர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். யுவன் சந்திரசேகர் பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை கரட்டுப்பட்டியிலும், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளை மேல்நாச்சிகுளம் அரசுப்பள்ளியிலும், எட்டாம் வகுப்பை பெரியகுளத்திலும் பயின்றார். பிறகு பள்ளியிறுதிவரை மதுரை ஷெனாய்நகர் மாநகராட்சிப் பள்ளியிலும், வணிகவியல் இளங்கலைப் பட்டப்படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் படித்தார். யுவன் சந்திரசேகர் கல்லூரிப் படிப்பு முடித்ததும் வங்கித்தேர்வு எழுதி பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராகச் சேர்ந்தார். சென்னைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற யுவன் சந்திரசேகர் ஸ்டேட் வங்கியில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.யுவன் சந்திரசேகர் சென்னை சிட்லப்பாக்கத்தில் வசிக்கிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என இதுவரை 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.