x

Kalki R.Krishnamurti

கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 டிசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். கல்கி 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி பழைய சென்னை மாகாணத்தில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அருகே அமைந்த பட்டமங்களம் எனும் ஊரில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு, அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர், 35 சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ஆம் ஆண்டு வெளியானது. எனினும், சமூக மற்றும் வரலாற்று நாவல்களை எழுதியதற்காகவே அதிகம் அறியப்படுகிறார். இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்னும் வரலாற்று நாவல் புகழ் பெற்றதாகும். இவர் எழுதிய ‘தியாகபூமி’ என்னும் நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. 1954-ஆண்டு கல்கி எழுதி முடித்த ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பலரது முயற்சிக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்தால் திரைப்படமாக எடுக்கப்பட்டு, முதல் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கல்கி எழுதிய ‘அலை ஓசை’ என்னும் நாவலுக்கு 1956-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.