R.Abilash
ஆர்.அபிலாஷ் (பிறப்பு: 1980) தமிழ் எழுத்தாளர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என பன்முக எழுத்தாளராக விளங்கி வருகிறார்.. 2014-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது “கால்கள்” என்ற நாவலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் பிறந்தார். இந்து வித்யாலயாவிலும், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்து, நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் இளங்கலை ஆங்கிலமும் (1998-2001), சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலை ஆங்கிலமும் (2002-04) படித்து பட்டம் பெற்றார். 2005-ல் பாளையங்கோட்டையில் உள்ள பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் சிலகாலம் மாலைமலர், பி.ஐ பப்ளிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 முதல் 2012 வரை சென்னை குருநானக் கல்லூரியிலும், 2012 முதல் 2013 வரை எ. எம். ஜெயின் கல்லூரியிலும் ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார். இதன் பின் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டார். 2007-ஆம் ஆண்டு முதல் முதல் உயிர்மை, அமிர்தா, தாமரை, புதிய காற்று, புதிய பார்வை, தமிழ் பெமினா, காட்சிப்பிழை, அந்திமழை ஆகிய இதழ்களில் கட்டுரை, சிறுகதை, கவிதை, மொழியாக்கம் ஆகிய படைப்புகளை வெளியிட்டு வருகிறார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.